Sunday, 30 September 2012

ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் – அக் 6-ல் ரிலீஸ்


இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீள புதிய படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு, ஆஸ்திரேலியத் தமிழரால் அங்கேயே உருவாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா என்பதுதான்.
இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் ஈழன் இளங்கோ. ஈழப் போர்க்களத்தில் இலங்கை படையினரால் நேரடியாக பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே குடும்பத்துடன் இந்தியா வந்து பின் ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர்.
இளங்கோவுடன் ஒரு நேர்காணல்…
கேள்வி: சினிமா ஆர்வம் எப்படி?
ஈழப் போரில் எல்லா தமிழ்க் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பமும் சொல்லொணாத துயரங்களைச் சந்தித்தது. எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு கட்டிய துணியோடு தமிழகம் வந்தோம்.
டபுவந்தாரை, வந்தாரை மட்டும் வாழ வைக்கும் தமிழகம் எங்களையும் வாழ வைத்தது! அங்கு பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் மாநிலக்கல்லூரியில் புள்ளியியல் பட்டப்படிப்பு முடித்தேன். சென்னையில் பல திரைப்பிரபலங்களின் தொடர்பு இருந்தாலும்; எனக்கு திரைத்துறையில் அவ்வளவு நாட்டம் இருந்தது இல்லை.
பின் 1999 ல் நியூசிலாந்து சென்றடைந்தேன். வாழும் நாடு சொர்க்கமாகவே இருந்தாலும் தாய் மண்ணின் இழப்பு மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஈழம் தொடர்பான பல நிகழ்வுகளில் மேடையேறியது பல தமிழ் உள்ளங்களில் என்னை இடம் பிடிக்க வைத்தது. தாய் மண்ணுக்காக என்னால் போராட முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி வருத்திக் கொண்டே இருந்தது. என்னால் என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்ய வேண்டும்? என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.
ஒவ்வொரு தனிமனிதனுடைய வெற்றியும் அந்த இனத்திற்கு கிடைக்கும் வெற்றி என்பதை புரிந்துகொண்டேன். ஈழத் தமிழனாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் தேர்ந்தெடுத்தது திரைப்படத்துறை. படிப்பில் ஒலிப்பதிவு, இயக்கம், தொகுப்பு சம்மந்தமான பாடங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சிப் பெற்றேன்.
பின் இந்தியா சென்று திரைப்பட தாயாரிப்பாளர் பாலுமகேந்திரா அவர்களை சந்தித்து அவருடைய அறிவுரை பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பின் ஒளிப்பதிவாளர் கைமல் அவர்கள் பல நுட்பங்களை அறிவுறுத்தினார். இவர்களுக்கு நான் மிகவும் கடமைபட்டுள்ளேன்.
2003 ம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்து சிகரம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிந்தேன். அச்சமயம் ஈழத்து மூத்த கலைஞர் யு ரகுநாதன் ஐயா அவர்களின் தொடர்பு நண்பர் கருணாகரன் மூலமாக கிடைத்தது. அதிலிருந்து உருவாகியது தான் “இனியவளே காத்திருப்பேன்”. சென்னையில் இசையமைப்பாளர் கவி என்னுடைய நெருங்கிய நண்பா. அவர் இசையமைத்த “அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை” என்ற பாடல் நம் மனதை உருக்கும் பாடல்களில் ஒன்று என்பதை நாம் யாவரும் மறந்து விட முடியாது. கவி இசையமைத்த இரண்டு பாடல்கள் எமது படத்தில் அமைந்தது எமது சிறப்பு.
கேள்வி: இந்திய திரைப்படத்துறை அசுர வளர்ச்சி அடைந்து நிற்கும் இக்காலத்தில் ஈழத் தமிழராகிய நாம் அவர்களுக்கு இணையாக வளர்ச்சியடைய முடியுமா? முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
முதலில் இந்த கேள்வியை என்னிடம் கேட்டதற்கு நன்றி. எனது பதில் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, அவ்வாறு அமைந்தால் என்னை தயவுசெய்து மன்னிக்கவும். உதாரணமாக, 1980 முடிவுவரை உலகிலேயே இலங்கை வானொலி தலைசிறந்த வானொலியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்திய தமிழர்கள் கூட விரும்பிக் கேட்கும் வானொலியாக இலங்கை வானொலி இருந்தது என்பதை கவிஞர் வைரமுத்துக் கூட குறிப்பிட்டு இருந்ததை நான் இங்கு கூற விரும்புகிறேன். ஆனால் இன்று இந்திய வானொலிகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. நம் மண்ணில் எமக்கு எதிராக நடந்த இனக் கலவரம் எமது வளர்ச்சியை குன்றச்செய்தது.
அதேபோல் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டோமேயானால் நாம் இந்திய திரைப்படங்களை ரசித்து வந்த போதிலும் எமக்கென்று தளம் அமைப்பதற்காக கலைஞர்கள் யு ரகுநாதன், ஏ ளு துரைராஜா, காவலூர் ராஜதுரை போன்றவர்கள் 70 களில் சில படைப்புகளை படைத்தார்கள். அந்த முயற்சி இனக் கலவரத்தின் காரணமாக முயற்சியோடு முடக்கப்பட்டுவிட்டது.
ஈழத் தமிழ் கலைஞர்கள் இலங்கை அரசின் அடக்குமுறையால் அடக்கப்பட்டு விட்டார்கள். எமது கலை வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். அதன் பின் எமது உயிரை காப்பாற்றவேண்டும், எமது இனத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஈழத்தமிழர்களின் நெஞ்கங்களில் மேலோங்கியிருந்தது. அதன் பின் எமது இனத்தைக் காக்கும் போராட்டத்தில் மட்டுமே எமது பங்களிப்பு அமைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இத்தருணத்தில் நாம் முழுக்க முழுக்க இந்திய படைப்புகளுக்கே அடிமையாகி விட்டோம் என்றே கூறவேண்டும. இதனால்தான் இன்று எமது கலைப்பயணத்தை வளர்க்க முற்படும்போது நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து தொடர்வதற்கு நாம் சற்று பின்நோக்கியே சென்று துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த வளர்ச்சியின் இடைவெளியை நாம் நிரப்ப சில காலம் ஆகலாம். ஆனால் நிச்சயம் கூடிய விரைவில் எமக்கென்று ஒரு தளம் அமைத்து சிறந்த படைப்பாளிகளாக நாம் மாறுவோம் என்பதில் எமக்கு எந்த ஐயமும் இல்லை. தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் தான் வளர்ச்சி என்ற வார்த்தைக்கே இடமிருக்கும். இதற்காக அவுஸ்திரேலிய வாழ் தமிழர்களுடைய முதற் படைப்பு தான் “இனியவளே காத்திருப்பேன்”.
வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே பல கனவுகள் இருந்தபோதிலும் எமது கவனம் எமது போராட்டத்தை மையமாக வைத்து மட்டுமே இருந்தது. திரைப்படத்துறையில் ஆர்வம் இருந்த சிலரும் கூட எமக்கு ஒரு தளம் அமைக்க வேண்டும் என்று கருதாது இந்திய படைப்புகளுக்கு தயாரிப்பாளர்களாக மட்டுமே ஆனார்கள். ஒரு படைப்பின் தரத்தை இரண்டாகப் பிரிக்கலாம், ஒன்று கலைநுட்பம், இதற்கு படைப்பாளியே முக்கிய பங்கு வகிக்கின்றான். இன்னொன்று தொழில்நுட்பம். இதற்கு பொருளாதாரமே முக்கிய பங்கை வகிக்கின்றது. அதிக பணம் செலவு செய்து தயாரித்து அதை மீட்கும் நிலையில் எமது தளம் இன்று இல்லை.
திரைப்படத்துறை தொழில்நுட்பக் கலைஞர்களும் எமது இனத்தில் மிக குறைந்தவர்கள் என்றே கூறலாம். ஆனால் இதை நினைத்து இப்படியே இருந்துவிட்டோமேயானால் எப்போதுமே இப்படியே இருந்துவிட வேண்டியதுதான். படைப்பாளிகள் உருவாகின்றார்கள். தொழில்நுட்பவாதிகள் தாமாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். மக்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு, மக்களின் ஆதரவை அடையும் கலைஞர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஒரு படைப்பின் வெற்றியையும் ஒரு கலைஞனின் வெற்றியையும் மக்களே நிர்ணயிக்கின்றார்கள் என்று கூட கூறலாம். ஒரு படைப்பாளியை. ஒரு கலைஞனை வாழும் போது அடையாளம் கண்டு ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வெற்றி இனத்தின் வெற்றியாகவே மாறுகின்றது. ஒரு மனிதனுடைய வளர்ச்சியின் பெருமை அந்த இனத்திற்கும் பெருமை தரும் என்ற எண்ணம் இன மக்களிடம் நிச்சயம் வேண்டும். ஆதரவும் அரவணைப்பும் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தாக அமையும்.
கேள்வி: “இனியவளே காத்திருப்பேன்” உருவாக்கிய அனுபவம்?
திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு மாயையாகவே, சாமான்ய மக்களின் எட்டாக் கனவாகவே இருந்து வந்திருக்கின்றது. நாமும் அப்படியே நினைத்திருந்தோம். திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆசை இருந்த எமக்கு தயாரிப்பாளருக்காக காத்திருந்ததில் இது ஒரு நிறைவேறாத கனவாகவே ஆகிவிடும் என்ற ஐயம் இருந்தது. ஆகவே எம்மிடம் கைவசம் இருந்த தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பவாதிகளையும் வைத்துக்கொண்டு கலைஞர்களை தேடும் முயற்சியில் இறங்கினோம். அதில் எதிர்பாராத நடைமுறை சிக்கல்களை சந்திக்கவேண்டியிருந்தது.
சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் திரைப்படத்துறையை கலை கண்ணோட்டத்தோடு அனுகுபவர்கள் எமது சமுதாயத்தில் மிகச் சிலரே என்று புரிந்தது. இருந்த போதிலும் நட்புக்காக நடிப்பதற்கு சிலர் முன் வந்தனர். இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு திரைத்துறை அனுபவம் இல்லை என்றே கூறலாம். இத்தருணத்தில் எனக்கு ஊக்குவிப்பை தந்து அனுபவத்தை பரிமாறிக்கொண்டு என்னை மனம் தளராமல் வழிநடத்திச்சென்றவர் ரகுநாதன் ஐயா அவர்கள். எழுபது வயதை தாண்டி ஐம்பது வருட திரையுலக அனுபவம் கொண்ட அவர் பிரான்சில் இருந்து “இனியவளே காத்திருப்பேனுக்காக” இங்கு வந்து அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து, பங்களிப்பை தந்தது மட்டுமல்லாது எமக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது எமக்கு கிடைத்த பெரும் பேறு.
இவரோடு நாச்சிமார் கோயிலடி வில்லுப்பாட்டுக் கலைஞர் ராஜன் தம்பையா அவர்கள் ஜெர்மனியில் இருந்து வந்து ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்தது எமக்குப் பெருமை. திரைப்பட தொகுப்பை முடித்துக்கொண்டு சென்னை சென்று திரைப்பட இசையமைப்பாளர் உதயன் அவர்களை பின்னணி இசைக்காக நாடினோம். அவருடைய பின்னணி இசை திரைப்படத்திற்கு மெருகூட்டியது. இறுதியில் நாம் பட்ட கஷ்டங்களின் பயன் “இனியவளே காத்திருப்பேன்” ஒரு தரமான படைப்பாக உருவாகி இன்று திரையில் வெளிவரும் தருணத்தை அடைந்திருக்கின்றது.
கேள்வி: உங்கள் திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் ஏதாவது உள்ளதா?
முக்கியமாக துப்பாக்கி கத்தி ரத்தம் குத்து சண்டை இல்லாத ஈழத்தமிழர்களுடைய முதலாவது படம் என்று பார்த்தவர்கள் கூறினார்கள். இரட்டை வேட காட்சி மற்றும் ஒருவர் பலராக தோன்றும் காட்சிகள் அமைந்துள்ளது. மக்களுடைய ஆதரவு இத் திரைப்படத்தின் முழு வெற்றிக்கு காரணமாக மட்டும் இல்லாமல் இனி வரும் படைப்புகளுக்கு தூண்டுகோலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. “இனியவளே காத்திருப்பேன்” ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களின் கலையுலக சாதனையில் இன்னுமொரு மைல்கல்.
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment